இப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்! ஆனால் ஏப் 15க்கு பிந்தைய ரயில்களுக்குத் தான் கிடைக்கும்!
கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த உலகமும் இயங்காமல் ஸ்தம்பித்து இருக்கிறது. இதில் இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் போக்குவரத்து துறையான இந்திய ரயில்வேஸும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை தன் சேவையை நிறுத்திக் கொண்டது.
இந்தியா முழுக்க லாக் டவுன் காலம் முடிந்த பின், ரயில்வே சேவைகள் ஏப்ரல் 14-க்குப் பின், வழக்கம் போல் இயங்கத் தொடங்கும். எனவே, ரயில்வே நிர்வாகம், ஏப்ரல் 15 முதல் மீண்டும் முன் பதிவைத் தொடங்கும் எனச் செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் உண்மை அது அல்ல. ஐ ஆர் சி டி சி புக்கிங் வலைதளத்தில் நுழைந்த உடனேயே “கோவிட்-19 அலர்ட்” என ஒரு பாப் அப் வருகிறது. “கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, மார்ச் 22 – ஏப் 14 வரையான தேதிகளில் ஓடும் எல்லா ரயில்களுக்கும் முன் பதிவுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறது” என தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை மேலே படத்தில் பார்க்கலாம்.
அதோடு, இந்த மார்ச் 22 – ஏப்ரல் 14 வரை, இந்திய ரயில்வே ரத்து செய்து இருக்கும் ரயில்களில் முன் பதிவு செய்து இருப்பவர்களுக்கு முழு தொகை ரீஃபண்ட் வழங்கப்படும். பயனர்கள், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.