சத்தீ்ஸ்கரில் ரூ.75,000 கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம் | Gautam Adani announces mega investment in Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்சாரம், சிமெண்ட், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சுற்றுலா என பல்வேறு துறைகளில் ரூ.75,000 கோடியை முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) தெரிவித்துள்ளது.
மேலும், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களையும் சிஎம்ஓ நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து சிஎம் ஓ தெரிவித்துள்ளதாவது: ராய்ப்பூர், கொர்பா மற்றும் ராய்கர்க் ஆகிய இடங்களில் உள்ள தனது மின் உற்பத்தி நிலையங்களை அதானி குழுமம் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்காக, அந்த குழுமம் ரூ.60,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்க திட்டங்கள் முழுமை பெறும் பட்சத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் கூடுதலாக 6,120 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும்.
அதேபோன்று, அந்த குழுமம் தனது சிமெண்ட் ஆலைகளை மேம்படுத்துவதற்கு ரூ.5,000 கோடி செலவிட உறுதியளித்துள்ளது.
மேலும், சுகாதாரம், திறன்மேம்பாடு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் அடுத்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசுடன் இணைந்து ரூ.10,000 கோடியை முதலீடு செய்ய அதானி குழுமம் உறுதியளித்துள்ளது. இவ்வாறு சிஎம்ஓ தெரிவித்துள்ளது.