சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு | Stock Market Crash
இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று கடும் சரிவு காணப்பட்டது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நிப்டி 23,600 புள்ளிகளுக்கும் கீழ் சென்று வர்த்தகமானது.
காலையில் பங்குச் சந்தையின் தொடக்கம் நேர்மறையாக இருந்தபோதிலும் இறுதியில் 1.5 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்தது. சீனாவில் வேகமாக பரவி வரும் எச்எம்பி வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் சந்தைகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, வங்கி மற்றும் நுகர்வோர் துறை பங்குகளின் செயல்பாடு மிக மோசமானதாக இருந்ததும் சந்தை இந்த அளவுக்கு சரிய முக்கிய காரணமானது.
குறிப்பாக, உலோகம், பொதுத் துறை வங்கி, ரியல் எஸ்டேட், எண்ணெய்-எரிவாயு, நிதித் துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு வரவேற்பு மிகவும் குறைந்துபோனது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா பங்கு 7.54 சதவீதம் சரிந்தது. அதேபோன்று, பேங்க் ஆப் பரோடா, எச்பிசிஎல், பிபிசிஎல், டாடா ஸ்டீல், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிஎன்பி பங்குகள் 4-5 சதவீதம் வரை சரிந்தன. எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
நேற்றை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,258 புள்ளிகள் (1.59%) சரிந்து 77,964.99 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிப்டி 50, 389 புள்ளிகள் (1.62%) வீழ்ச்சியடைந்து 23,616.05 புள்ளிகளில் நிலைபெற்றது.