இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என். சீனிவாசன் ராஜினாமா | India Cements Managing Director Srinivasan resigns
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.ஸ்ரீநிவாசன் அப்பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32 சதவீத பங்குகளை ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் கையகப்படுத்துவதற்கு சிசிஐ எனப்படும் இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸின் 10.13 கோடி பங்குகளை வாங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7,000 கோடியாகும். இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையின் மூலம் அல்ட்ரா டெக் சிமெண்டின் துணை நிறுவனமாக இந்தியா சிமெண்ட்ஸ் உருவெடுக்கும்.
இந்தியா சிமெண்ட்ஸை கையகப்படுத்துவதற்கு அல்ட்ரா டெக் நிறுவனத்துக்கு சிசிஐ அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து என்.சீனிவாசன் புதன்கிழமை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் குழுவிலிருந்து சீனிவாசனின் மனைவி சித்ரா சீனிவாசன், மகள் ரூபா குருநாத் மற்றும் வி.எம். மோகன் உள்ளிட்டோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் விலகலைத் தொடர்ந்து, கே.சி. ஜன்வர், விவேக் அகர்வால், இ.ஆர். ராஜ் நாராயணன் மற்றும் அசோக் ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேர் புதிய இயக்குநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.