பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை..!
அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போல் பாகிஸ்தானில், பாகிஸ்தான் சூப்பர் லீக் என டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஐந்தாவது சீசன் நடப்பு ஆண்டு பிப்ரவரி 20 ம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெறுவதாக இருந்தது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் உமர் அக்மல் Quetta Gladiators அணிக்காக விளையாடி வருகிறார். இவரை போட்டியின் போது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடும் படி சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். இதனை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியாமல் மறைத்துள்ளார்.
இது தொடர்பாக புகார் எழுந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது இதற்கு பதில் அளிக்காததால் மூன்று ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை பிப்ரவரி மாதத்திலிருந்து தொடரும் எனவும் தெரிவித்துள்ளது .பாகிஸ்தான் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ரமீஷ் ராஜா, உமர் அக்மலை கடுமையாக சாடியுள்ளார். மொத்த திறமையையும் பாழாக்கிவிட்டாய் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒரு நாள், 84 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.