ஹூண்டாய், ஆடி நிறுவனங்கள் ஒப்பந்தம்
ஃபியூயல் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களை உருவாக்கும் வகையில் ஆடி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கியா உள்ளிட்ட ஹூண்டாய் நிறுவனங்கள் மற்றும் ஆடியின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் போன்றவை தங்களது வாகன பாகங்கள் தயாரிப்பு மற்றும் காப்புரிமைகளை இந்த ஒப்பந்தம் மூலம் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்துக்கான கால அளவு குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஹூண்டாய் 2013-ம் ஆண்டு முதல் ஃபியூயல் செல் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் ஏற்றும் மையங்கள் குறைவாக உள்ள காரணத்தால் இந்த வாகனங்கள் தென் கொரியா மற்றும் பிற பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் ஏற்றும் மையங்களை அதிகரிக்க தென் கொரிய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.