ஒசாமா பின்லேடன் மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாதியானார்: மவுனம் கலைத்த தாயார்
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மூளை சலவைக்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதியாக்கப்பட்டார் என எட்டு வருடங்களுக்கு பின்னர் மவுனம் கலைத்திருக்கிறார் பின்லேடனின் தாயார் அலியா கானேம்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் அந்நாட்டு அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன்.
இதன் பின்னர் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் கடந்த 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றனர்.
ஒசாமா பின்லேடன் இறந்து எழு வருடங்களுக்குப் பிறகு அவருடைய தாயார் அலியா கானேம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார்.
தற்போது சவுதியில் ஜெட்டா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வரும் அலியா அந்த நேர்காணலில் பேசியதாவது:
“எனது வாழ்கை மிகக் கடினமாகிவிட்டது. ஓசாமா பின்லேடன் என்னிடமிருந்து வெகு தொலைவு சென்றுவிட்டார். அவர் மிகவும் தன்னம்பிக்கை மிக்க குழந்தையாக இருந்தார். அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஒசாமா தனது 20 – வயதில் கின் அபுலாசிஸ் பல்கலைகழகத்தில் பொருளாதாரம் படித்துக் கொண்டிருக்கும்போது மூளை சலவைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதுலிருந்து அவர் மிகவும் வித்தியாசமான நபராக காணப்பட்டார். அந்த பல்கலைகழகமும், அங்கிருந்தவர்களும் ஒசாமாவை மாற்றினார்கள். நான் அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறினேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் அதனை விரும்பினர்.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு என் மகன் தான் காரணம் என்று தெரிந்து எங்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.