EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கும் எண்ணம் இல்லை: ஈரான்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் போம்பியோவை சிங்கப்பூரில் சந்திக்கும் எண்ணம் இல்லை என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் 51-வது கூட்டத்தில் ஈரான், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா – ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையே சந்திப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சிங்கப்பூரில் நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவை சந்திக்கும் எண்ணம் இல்லை. அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் அவர்களது ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறது” என்றார்.
வலுக்கும் மோதல்
அமெரிக்கா, ஈரான் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் முற்றி வருவது சர்வதேச நாடுகளுக்கிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.