EBM News Tamil
Leading News Portal in Tamil

‘விமானத்தில் பயணிக்க வந்த கங்காரு’ – வைரல் வீடியோவின் ஏஐ பின்னணி! | Kangaroo to board flight fact behind ai generated viral video


சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பதிவுகளில் நாம் பார்க்கின்ற பதிவுகளில் சில போலியாக உருவாக்கப்பட்டவை. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் வரவினால் ‘கண்ணால் காண்பது பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்பதற்கு உதாரணமாக பல்வேறு பதிவுகள் உள்ளன. அதில் ஒன்றாக உள்ளது இந்த கங்காரு வீடியோ பதிவு.

அந்த வீடியோவை ஷீத்தல் யாதவ் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் கங்காரு ஒன்று கையில் போர்டிங் பாஸ் உடன் விமானத்தில் பயணிக்க தயாராக நிற்கிறது. இருப்பினும் விமான நிறுவன பணியாளர் அதை பயணிக்க அனுமதிக்கவில்லை என்றும். அதுகுறித்து பெண்கள் இருவர் விவாதிக்கின்றனர் என்றும் அதில் கேப்ஷனாக தெரிவிக்கப்பட்டது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 1.96 லட்சம் பேர் பார்த்திருந்தனர். சுமார் ஐந்தாயிரம் பேர் லைக் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறியும் வகையில் பிடிஐ செய்தி நிறுவனத்தின் உண்மை கண்டறியும் குழு (Fact Check) கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச், இன்-விட் டூல், கூகுள் லென்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்றும், இது முதன்முதலில் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டது என்றும் கண்டறிந்துள்ளது.

எக்ஸ் தளத்திலும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என இப்போது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ டீப்ஃபேக் பாணி வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.