மாணவர் கண்டுபிடித்த ட்ரோன் – காப்டர்: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு | Anand Mahindra praises Gwalior student innovative drone-copter
குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த பள்ளி மாணவர் மெத்னேஷ் திரிவேதி. இவர் 3 மாதங்கள் கடினமாக உழைத்து ஒரு ட்ரோனை உருவாக்கி உள்ளார். ஹெலிகாப்டர் போன்று இந்த ட்ரோன் – காப்டரில் 80 கிலோ எடை கொண்ட ஒருவர் பறந்து செல்ல முடியும். ஆறு நிமிடங்கள் வரை பறக்கும் திறனுடன் இதை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘திரிவேதியின் ட்ரோன் புதுமையைப் பற்றியது அல்ல. இணையதளத்தில் இயந்திரத்தை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், இது இயந்திரவியலில் திரிவேதிக்கு உள்ள ஆர்வம், அர்ப்பணிப்புப் பற்றியது. இந்த இயந்திரத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற அவரது பொறுமையை பற்றியது. இவரைப் போன்ற இளைஞர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும்போது, அந்தளவுக்கு நமது நாடும் புதுமையானதாக மாறும்’’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.