இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.
நட்சத்திர ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இந்திய அணி எப்படி இலங்கை அணியை எதிர்கொள்ளும் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விகளுக்கு எல்லாம் தங்கள் பந்துவீச்சாலும், பவுண்டரிகளாலும் பதில் கூறியுள்ளது இளம் இந்திய அணி.
டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 10-ஆவது ஓவரில் தொடங்கிய இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதல் கடைசி வரை தொடர்ந்தது.
இலங்கை சார்பாக களமிறங்கிய வீரர்களில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ (33 ரன்கள்), சரித் அசலங்கா (38 ரன்கள்), இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகா (39 ரன்கள்), சமிகா கருணரத்னெ (43 ரன்கள்) குவித்தனர்.
தீபக் சஹார் 7 ஓவர்களை வீசி 37 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 10 ஓவர்களை வீசி 52 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 9 ஓவர்களை வீசி 48 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஹர்திப் பாண்டியா 5 ஓவர்களை வீசி 34 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும், க்ருனால் பாண்டியா 10 ஓவர்களை வீசி 26 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவரின் எகானமி 2.60 என்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.