EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு.. அடுத்த தவணை 11-ம் தேதிதான் கிடைக்கும் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது, மத்திய அரசிடம் இருந்து அடுத்த தவணை தடுப்பூசி 11-ந்தேதிதான் கிடைக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. தடுப்பூசி மையங்களில் இன்று தடுப்பூசிகள் போடப்படாது என்ற அறிவிப்பு பலகைகளை காண முடிந்தது. அதிகாலையில் இருந்து காத்திருந்த மக்கள் இந்த அறிவிப்பின் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில்   செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வருவதால், மத்திய அரசு கூடுதலாக அனுப்பக்கூடிய தடுப்பூசிகளும் போதவில்லை. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், 11-ந்தேதி தான் அடுத்த தவணை தடுப்பூசிகள் கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.ஆனால் அதற்கு முன் கூட்டியே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகளில் கூட்டம் அதிகம் வரும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.