EBM News Tamil
Leading News Portal in Tamil

சூர்யா, ஜோதிகா – திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையை பேசித் தீர்க்க அரசு முடிவு..!

நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT மூலமாக நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள், அவர்கள் சார்ந்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இனி வெளியிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்கள் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் கேட்டபோது “பாதிக்கப்படுகின்றவர்கள் (திரையரங்கு உரிமையாளர்கள்) அவர்கள் கருத்தினை கூறியுள்ளனர். இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை. இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன்.

இரு தரப்பினரும் அமர்ந்து பேச வேண்டிய பிரச்னை என்பதால் இரு தரப்பும் பேசி தீர்க்க அரசு உதவி செய்யும். இந்த விஷயத்தில் முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “திரைப்பட நல வாரியத்தை சேர்ந்த 7,459 பேருக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளோம். இதில் விடுபட்டவர்களுக்கு பத்திரிகையின் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளோம். திரைப்பட நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள், தங்களது பதிவு எண்ணையும், தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் திரைப்பட நிலவரத்தை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தெரிவித்தால் விடுபட்ட அனைவருக்கும் வழங்கப்படும்” .என்றார்.