EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கு நீட்டிப்பு… மே மாதமும் விலையில்லா பொருட்கள்…! முதல்வர் அறிவிப்பு என்னென்ன?

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ம் தேதி இரவு நாடு முழுவதும் ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார். இந்த ஊரடங்கு நாளை இரவுடன் முடிவுக்கு வருகிறது.

எனினும், கொரோனா தொற்று நிலை கருதி பஞ்சாப், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய பல மாநிலங்கள் இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. பிரதமரின் அறிவிப்பை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே, அனைத்து மாநில முதல்வர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதனிடையே, நாளை காலை 10 மணிக்கு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்திருந்தது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியிருந்தார். கடந்த 11-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.இதன்மூலம், தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும், குடும்ப அட்டைதாரர்களுக்கான மே மாத அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்.

அதாவது, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் மற்றும் எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக்கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

மேலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து, தமிழகத்தில் காலை 6 மணி முதல் 1 மணிவரை பேக்கரிகள் இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறைகளின்படி பார்சல் விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தப்படுகிறது.