தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு!
ஈரோட்டில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சென்னையில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர் உயிரிழந்துள்ளார் . இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது.
இதே நேரத்தில் சென்னையில் உள்ள இண்டிகோ விமான நிறுவன பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் முடங்கியுள்ள நிலையில், இத்தொற்றால் பாதிக்கப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்திருப்பது இத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்துள்ள அந்த ஊழியர் குறித்த தகவல்களை இண்டிகோ நிறுவனம் வெளியிடாத நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், உயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும், பொறியியல் பிரிவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் அவர் பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, ஈரோட்டிலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.