கொரோனா தொற்று அச்சுறுத்தல்: சிறையில் இருந்து விடுவிக்கக் கோரும் வெளி நாட்டினர்!
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினர் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக இலங்கை, ரஷ்யா, வங்கதேசம், தென் கொரியா, கென்யா, பல்கேரியா, ரூவாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 73 பேர் தற்போது உள்ளனர்.
சிறப்பு முகாமில் தங்கும் அறையில் இடநெருக்கடி, உரிய சுகாதார வசதியில்லை. சிலருக்கு சளி, காய்ச்சல் உள்ளது. இதனால், கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளதால், தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வெளிநாட்டினர் 20க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.