வெளிநடப்பு ஏன்: ஸ்டாலின் விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து இன்று( ஜூன் 11) தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
சபையில் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டம் குறித்த விவாதம் நடந்தது. நான் குறுக்கிட்டு, அந்த திட்டத்தை தி.மு.க., வரவேற்கிறது. எனினும், அந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என கூறினேன். இப்போது தான் தூத்துக்குடி சம்பவம் நடந்தது. அது போல் மீண்டும் நடந்து விட கூடாது என கூறினேன். இது குறித்து, பகல், 11 மணிக்கு பேசி முடிந்தாகி விட்டது. அதன் பிறகு நான், தூத்துக்குடி குறித்து பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதை கண்டித்து சபையில் இருந்து தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.