EBM News Tamil
Leading News Portal in Tamil

நிர்மலா சீதாராமனின் ‘பட்ஜெட் நாள்’ சேலையின் நெகிழ்ச்சிப் பின்னணி கதை! | The story behind Nirmala sari on budget 2025 day


புதுடெல்லி: பிஹாரின் சுயாதீன மதுபானி கலைஞரான துலாரி தேவிக்கும், அந்தக் கலைக்கும் மரியாதை செய்யும் விதமாக இன்று (சனிக்கிழமை) பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் உடுத்தி வந்த சேலை வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்டாகும். ஒவ்வொரு பட்ஜெட்டை தாக்கலைப் போலவே அவர் அணிந்திருக்கும் சேலையும் எதிர்பார்ப்பைகளை உருவாக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஜவுளி பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக அந்தச் சேலைகள் இருக்கும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது நுணுக்கமான தங்க இழை வேலைப்பாடுகள், ஓவியங்களுடன் கூடிய வெள்ளை நிறச் சேலையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்திருந்தார். அத்துடன் அவரது ட்ரேட் மார்க்கான ‘பாஹி கட்டா’ சால்வையும், இந்திய அரசு முத்திரையுடன் கூடிய வெல்வெட் பையில் பட்ஜெட் உரை அடங்கிய டேப்லேட்டும் கையில் வைத்திருந்தார். நிதியமைச்சர் அணிந்து வந்திருந்த சேலை வெறும் ஆடை என்பதைக் கடந்து அதற்கு பின்னால் ஒரு சுவார்ஸ்யமான நெகிழ்ச்சியான கதை ஒன்று உள்ளது.

பரிசாக வந்த சேலை: இன்று நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் சேலை, பிஹாரின் சுயாதீன மதுபானிக் கலைஞரான, பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி பரிசாக வழங்கியது. பிஹாரின் மதுபானியில் உள்ள மிதிலா கலை நிறுவனத்துக்கு ஒரு கடன் வழங்கும் நிகழ்ச்சிக்காக நிதியமைச்சர் சென்றபோது அவர் துலாரி தேவியைச் சந்தித்தார். அப்போது துலாரி தேவி, நிதியமைச்சருக்கு இந்தச் சேலையை பரிசாக அளித்து, பட்ஜெட் தாக்கலின்போது அதனை அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மதுபானி கலை மற்றும் துலாரி தேவியின் தனித்துவமான திறமைக்கு மரியாதை செய்யும் விதமாகவும், துலாரியின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாகவும் இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது பரிசளிக்கப்பட்ட அந்தச் சேலையை அணிந்து வந்தார்.

நெகிழ்ச்சி கதை: புகழ்பெற்ற மதுபானி கலைஞராக மாறிய துலாரி தேவியின் பயணம் அனைவருக்கும் உத்வேகமளிக்கும் கதையாகும். துலாரி தேவி, ஓவிய பாரம்பரியம் இல்லாத மீனவ சமூக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் பிரபலமான மதுபானி கலைஞரான கற்பூரி தேவியிடம் பணிபுரிந்த போது, அந்த கலை மீதான ஆர்வம் அவரைத் தொற்றிக்கொண்டது.

16 வயதில் கணவனால் கைவிடப்பட்டது, குழந்தையை இழந்தது, 16 வருடங்கள் வீட்டு வேலையாளாக பணியாற்றியது என்ற எந்த துன்பமும் துலாரி தேவியை சோர்வடையச் செய்யவில்லை. துலாரியின் ஓவியங்கள் குழந்தை திருமணம், எய்ட்ஸ், பெண் சிசுகொலை போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புகின்றன. துலாரி 10,000 ஓவியங்களை உருவாக்கியுள்ளார். நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் அவற்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

மேலும், மதிலா கலை நிறுவனம் மற்றும் சேவா மிதிலா சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் மூலம் 1,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இந்தப் பாரம்பரிய கலை வடிவம் எதிர்காலத்திலும் செழித்து வருவதை துலாரி உறுதி செய்துள்ளார்.

இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமான சேலைகளை நிர்மலா சீதாராமன் அணிவது இது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த பாரம்பரிய ஆடைகள்:

> 2019-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது, தங்க நிற பார்டருடன் கூடிய இளஞ்சிவப்பு நிற மங்களகிரி பட்டுசேலை அணிந்திருந்தார். அத்துடன் தனது முத்திரையான பாஹி கட்டா சால்வையும் அணிந்திருந்தார்.

> 2020-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது நம்பிக்கை மற்றும் செழிப்பைக் குறிக்கும் வகையில் பச்சை நிற பார்டர் கோடுகளுடன் கூடிய மஞ்சள்நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

> 2021-ம் ஆண்டு, இந்திய நெசவு சமூகத்துக்கு ஊக்கமளிக்கும் விதமாக சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டு சேலை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.

>2022-ம் ஆண்டு, பிரந்திய கைவினைத் திறனை பிரதிபலிக்கும் விதமாக ஒடிசாவில் இருந்து வந்திருந்த பழுப்பு மற்றும் மெரூன் நிற போம்காய் சேலை உடுத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

> 2023-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது கர்நாடகாவின் கைவினை கலையான கருப்பு கச்சுட்டி எம்ப்ராய்டரி சேலையை அணிந்திருந்தார்.

> 2024-ம் ஆண்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கந்தா எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய நீல நிற டஸ்ஸர் பட்டுச் சேலை உடுத்தியிருந்தார். | வாசிக்க > மத்திய பட்ஜெட் 2025 – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?