ஐசிசி-இன் கேள்விக்கு ‘புல்லட் பாண்டி’ புகைப்படம்… அஸ்வின் கலகல பதில்..!
ஐசிசி-யின் கேள்வி ஒன்றுக்கு காமெடி நடிகர் வடிவேலுவின் கோவில் பட காமெடி ‘புல்லட் பாண்டி’ புகைப்படத்தை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 29-ம் தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் ஐ.பி.எல் தொடர் எப்போது தொடங்கும் என்று இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை. இதனிடையே ஊரடங்கு நேரத்தில் வீட்டில் ஓய்வில் உள்ள வீரர்கள் தங்கள் அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்?” என்று ஒரு கேள்வி எழுப்பியது.
ஐ.சி.சி-யின் இந்த பதிவிற்கு பலர் தங்களது கருத்தை பதிவிட்டு வந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கோவில் திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி கதாபாத்திரமான ‘புல்லட் பாண்டி’ புகைப்படத்தைப் பதிவிட்டு இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.