EBM News Tamil
Leading News Portal in Tamil

சாம்பியன்ஸ் டிராபியை இங்கிலாந்தில்தானே ஆடினோம்… வங்கதேசத்தில் இல்லையே?- விராட் கோலியின் விகடம்

இங்கிலாந்தில் மிக நீண்ட தொடருக்குச் செல்லும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடப்போயிருந்தால் கூட நான் இவ்வளவு ஃபிட் ஆக இருந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி 2014 தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடமே விக்கெட்டைப் பறிகொடுத்தது பற்றி மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்ப கொஞ்சம் சீரியசாக ஆனால் நிறைய விகடத்துடன் பதிலளித்தார் விராட் கோலி.
அவர் கூறியதாவது:
திரும்பிப்பார்க்கையில் இப்போது யோசித்துப் பார்த்தால் கவுண்டி கிரிக்கெட்டுக்குச் செல்லாமல் இங்கு உடல்தகுதி நிலையை சரி செய்ததுதான் எனக்கு சிறப்பானதாகத் தெரிகிறது. அங்கு டெஸ்ட்டில் விளையாடி 4 ஆண்டுகள் பெரிய இடைவெளிதான், அதனை அங்கு சென்று புதிதாக சூழ்நிலைகளைக் கிரகிக்க விரும்புகிறேன்.
நான் அங்கு சென்றிருந்தால் 90%தான் திருப்தியடைந்திருப்பேன் ஆனால் இப்போது 110% திருப்தியுடன் இருக்கிறேன். தொடருக்கு முன் நான் புத்துணர்வுடன் இருக்க வேண்டும், ஆகவே இதுவே சரி. ஆனால் இப்படியிருக்க வேண்டும் என்று நினைத்துச் செய்யவில்லை.. அப்படி நடந்து விட்டது.
2014 தொடரில் என் பேட்டிங் தோல்விகள் பற்றி நீண்ட காலம் பேசிவிட்டோம். சாம்பியன்ஸ் டிராபியை இடையில் இங்கிலாந்தில்தான் ஆடினோம் என்று நினைக்கிறேன் பங்களாதேஷில் இல்லையே!!
கடந்த முறை இங்கிலாந்து செல்லும் போதும் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது நான் என்ன செய்யப்போகிறேன் என்று, நான் ஒரு கப் காபி சாப்பிட விரும்புவதாகக் கூறினேன். பயணத்தில் செல்லும் போது என் மன நிலை வித்தியாசமாக இருக்கும் அந்த நாட்டை முழுதும் மகிழ்வுடன் கண்டு களிக்க விரும்புகிறேன்.
நான் நல்ல நிலையில் உணர்வில் இருக்கும் போது நான் நன்றாக ஆடுவேன் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்கள் போல் ‘ஓ, நான் நன்றாக ஆடவேண்டியத் தேவை உள்ளது’ என்று நினைக்க மாட்டேன். களத்தில் அங்கு எதைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நன்றாக நான் அறிந்தேயிருக்கிறேன்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 (ஜூன் 27)யில் இறங்குகிறேன். 100% விளையாடுவேன். கழுத்தும் சரியாகி விட்டது. மும்பையில் 6-7 செஷன்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். நல்ல பயிற்சி எடுத்தேன், எனவே நான் முழுதும் தயாராகவே உள்ளேன். ஓய்வு இடைவெளி எனக்கு புத்துணர்வு அளிக்கிறது.
உத்தி என்னவென்று கேட்டால், அதில் எந்த மாற்றமும் இருக்காது, தொடருக்குத் தொடர் உத்தியில் மாற்றம் தேவையிருக்காது. பொறுமை இல்லாவிட்டால்தான் உத்தியில் அடிக்கடி மாற்றம் தேவைப்படும். உங்களைப் போல் நாங்களும் யோசிக்கத் தொடங்கினால் அங்குதான் பிரச்சினைகள் தொடங்கும்” என்றார் விராட் கோலி.