டி20 சதம் அடித்ததில்லை, அதை ஏன் இங்கு, இன்று எடுக்கக் கூடாது?- நகைச்சுவையுடன் ஷிகர் தவண்
ஆப்கானுக்கு எதிராக உணவு இடைவேளைக்கு முன் சதமெடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய ஷிகர் தவண் ஆட்டம் முடிந்த பிறகு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஷிகர் தவன், ஆப்கான் ஸ்பின்னர்கள் வந்தவுடன் புகுந்து விளையாடினார், நபியின் முதல் ஓவரில் விளாசல், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மானுக்கு ஸ்வீப், மேலேறி வந்து தூக்கி அடித்தல் அபாரமான ட்ரைவ்கள் என்று தன் ரேஞ்ச் முழுதையும் காட்டிவிட்டார் ஷிகர் தவன், அவர்களும் அதற்கேற்றாற்போல் புல்டாஸ்கள், ஷார்ட் பிட்ச்கள் என்று அள்ளி வழங்கினர்.
வஃபாதார் பந்தில் மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, நடுவர் தீர்ப்பு உஷ் கண்டுக்காதீங்க ஆனதால், பிழைத்த ஷிகர் தவண் அடுத்த 17 ஓவர்களில் உணவு இடைவேளைக்கு முன் சதம் எடுத்த நாயகரானார்.
டான் பிராட்மேன் 6 முறை ஒரே செஷனில் 100 ரன்களுக்கும் மேல் எடுத்திருக்கிறார் என்றால் தவண் இதோடு சேர்த்து 3 முறை அவ்வாறு செய்துள்ளார்.
இந்நிலையில் ஷிகர் தவண் கூறியதாவது:
ஒரே செஷனில் சதமடிப்பது மிகப்பெரிய விஷயம். இந்திய வீரர் யாரும் இதனைச் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியாது.
என்ன, நாம் இன்னும் டி20 சதமே எடுக்கவில்லையே, அதை இன்று, இங்கு எடுத்தால் என்ன என்று நினைத்தேன் (சிரிப்பு). நான் நல்ல மனநிலையில் இருந்தேன். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். பவுலிங்கும் என் வழிக்குச் சாதகமாக அமைந்தது.
இந்த ஆட்டத்துக்கும ஐபில்-க்கும் இடையே நான் என் உடற்தகுதியைப் பராமரித்தேன். அதிகம் பேட் செய்யவில்லை. ஆனாலும் இன்று அவுட் ஆன விதம் ஏமாற்றமளிக்கிறது, ஆனால் நான் அப்படித்தான் ரன்களையும் எடுக்கிறேன், ஆகவே அத்தகைய ஷாட்டை ஆடி அவுட் ஆவது தடுத்தாடுவதை விட பரவாயில்லை.
இவ்வாறு கூறினார் ஷிகர் தவண்.