EBM News Tamil
Leading News Portal in Tamil

அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி: பிளே ஆஃப் சுற்றின் 2 ஆட்டங்கள் முலான்பூரில் நடைபெறுகிறது | IPL final in Ahmedabad


ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும், பிளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் முலான்பூரிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் 11-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டது. இதன்படி திருத்தியமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை வெளியிட்டது. இதில் இறுதிப் போட்டி மற்றும் பிளே ஆஃப் சுற்று நடைபெறும் இடங்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

கடந்த 17-ம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் நடைபெற்றுவ வரும் தற்போது லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் கடைசி ஓர் இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.

இந்நிலையில் இறுதிப் போட்டி மற்றும் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதன்படி ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் ஜூன் 1-ம் தேதி தகுதி சுற்று 2 ஆட்டமும் நடைபெறும். முன்னதாக தகுதி சுற்று 1 ஆட்டம் வரும் 29-ம் தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் 30-ம் தேதியும் முலான்பூரில் நடைபெறுகிறது.

அகமதாபாத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி 3-வது முறையாக நடைபெற உள்ளது. ஏற்கெனவே 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும் இங்கு இறுதிப் போட்டி நடைபெற்று இருந்தது.

பழைய அட்டவணையின்படி தகுதி சுற்று 2 ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும், முதல் தகுதி சுற்று ஆட்டம், எலிமினேட்டம் ஆட்டம் ஆகியவை ஹைதராபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பருவமழை காரணமாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.