EBM News Tamil
Leading News Portal in Tamil

லக்னோ அணி 2 பேருக்கு ரூ.48 கோடியை செலவழித்தால் வலுவான பந்துவீச்சு குழுவை உருவாக்க முடியாது: டாம் மூடி கருத்து | Tom Moody analyses LSG problems after being knocked out of IPL 2025 playoffs race


ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 205 ரன்களை குவித்த போதிலும் பலவீனமான பந்துவீச்சால் லக்னோ அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

இந்த சீசனுக்காக ரிஷப் பந்த்தை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேவேளையில் நிகோலஸ் பூரனை ரூ.21 கோடிக்குத் தக்க வைத்தது. இவர்கள் இருவருக்கு மட்டுமே ரூ.48 கோடியை செலவழித்தது லக்னோ அணி நிர்வாகம். இதன் காரணமாகவே வலுவான பந்துவீச்சு துறையை லக்னோ அணியால் கட்டமைக்க முடியாமல் போனதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, “ரிஷப் பந்த் மற்றும் நிகோலஸ் பூரனுக்காக செலவிட்ட மிகப் பெரிய தொகையினால் நல்ல வீச்சு குழுவை லக்னோ அணியால் கட்டமைக்க முடியாமல் போய்விட்டது. ஏலத்தில் மற்ற பந்துவீச்சாளர்கள எடுக்க போதிய நிதி ஆதாரம் இல்லாமல் போனது.

நிகோலஸ் பூரன், டேவிட் மில்லர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் ஆகியோர் ஓர் அணியில் இருப்பது சிறப்பான விஷயம்தான். இவர்கள் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள். ஆனால் போட்டியின் தினத்தில் பந்துவீச்சும் இருக்க வேண்டும். பவர் பிளேயில் தாக்கம் செலுத்தும் பந்துவீச்சாளர்கள் தேவை.

நடு ஓவர்களில் தகவமைப்புத் திறன் கொண்டவராகவும், விக்கெட்டுகளை வீழ்த்துபவராகவும், எதிரணியை நசுக்குபவராகவும் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும்.

மேலும் இன்னிங்ஸின் இறுதிப்பகுதியில், அழுத்தத்தின் கீழ் ஆட்டத்தை முடிக்கக்கூடிய வகையில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். எதிரணி உங்களுக்கு எதிராக கடுமையாகப் போராடும்போது மிகவும் சவாலான ஓவர்களை வீச வேண்டும். ஆனால் இவை எதுவும் லக்னோ அணியிடம் இல்லை” என்றார்.