சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் 2 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முகாம் டிஏசி டெவலப்பர்ஸ், 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், ரோமா குரூப், காஸ்கோ இந்தியா பிரைவெட் லிமிட்டெட் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
பயிற்சி முகாம் நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் துளசி ரெட்டி, எஸ்டிஏடி மேலாளர் மகேஷ்வரி, சென்னை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகத் துணைத் தலைவர் பி.ஜெகதீசன், துணைத் தலைவர் ஏ.தினகர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பொருளாளர் ஏ.பழனியப்பன், செயலாளர் சி.கேசவன், துணைச் செயலாளர் ஏ.பாக்யராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.