டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற கோலி விருப்பம் – சிக்கலில் இந்திய அணி? | team india batsman virat kohli wish to retire from test cricket informed bcci sources
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைய உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் 37 வயதான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் 36 வயதான நட்சத்திர வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியம் என்பதால் அணி தேர்வுக்கு முன்னதாக பிசிசிஐ தரப்பில் இருந்து விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படக்கூடும் என கருதப்படுகிறது. விராட் கோலி தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர் 14 ஆண்டுகால தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்வார். அவர், 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். 68 போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். 30 சதங்கள், 31 அரை சதங்கள் விளாசியுள்ளார்.
ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அநேகமாக ஷுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அனுபவம் வாய்ந்த விராட் கோலியும் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது அணி நிர்வாகத்தையும், தேர்வுக்குழுவினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற உடன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலியும் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் விடைபெற விரும்புவதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இளம் வீரர்களை கொண்டே இந்திய அணி அணுகக்கூடும்.
ஏற்கெனவே ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓய்வு பெற்றுவிட்டார். சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்வு செய்யப்படுவதில்லை. ரஹானே கடைசியாக 2023-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதேவேளையில் புஜாரா அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்கியிருந்தார்.
காயத்தில் இருந்து மீண்டு சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு விளையாடத் தொடங்கி உள்ள முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மட்டுமே அனுபவ வீரர்களாக உள்ளனர். ஒருவேளை விராட் கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடாவிட்டால் இந்தத் தொடர் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக இருக்கும்.