ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் மதுரா தாமங்கோங்கர் 139-138 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கார்சன் கிராஹேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் அபிஷேக் வெர்மா, ஓஜஸ் தியோடேல், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 232-228 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் மதுரா தாமங்கோங்கர், ஜோதி சுரேகா, ஷிகிதா தனிபர்த்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 221-234 என்ற கணக்கில் மெக்சிகோ அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மதுரா தாமங்கோங்கர், அபிஷேக் வெர்மா ஜோடி 144-142 என்ற கணக்கில் மலேசிய ஜோடியை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ரிஷப் யாதவ், தென் கொரியாவின் கிம் ஜோங்கோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 145-145 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற் ஷூட்-ஆஃப்பில் ரிஷப் யாதவ் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த தொடரில் இதுவரை காம்பவுண்ட் பிரிவில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இன்று கடைசி நாள் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா மேலும் 3 பதக்கங்களை வெல்ல களமிறங்குகிறது. இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடுகிறது. மேலும் பார்த் சாலுங்கே, தீபிகா குமாரி ஆகியோர் அரை இறுதி சுற்றில் விளையாடுகின்றனர்.