கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி! | Rajasthan lost the match against Kolkata by one run ipl 2025
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் அதிரடியாக குவித்த 95 ரன்கள் வீணானது.
இந்த ஆட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 35, சுனில் நரேன் 11, கேப்டன் அஜிங்கிய ரஹானே 30 ரன்கள் குவித்தனர். 4-வது வீரராக களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 31 பந்துகளில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆந்த்ரே ரஸ்ஸலும், ரிங்கு சிங்கும், ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கினர். ரஸ்ஸல் 57 ரன்களும் (25 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்ஸர்), ரிங்கு சிங் 19 ரன்களும் (6 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், யுத்விர் சிங், மகேஷ் தீக்சனா, ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34, வைபவ் சூர்யவன்ஷி 4, குணால் சிங் ரத்தோர் 0, துருவ் ஜுரெல் 0, ஷிம்ரன் ஹெட்மயர் 29 ரன்கள் எடுத்தனர். ஒரு புறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ரியான் பராக் 95 ரன்கள் (45 பந்துகள், 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) சேர்த்து அவுட்டானார்.
கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரும், ஷுபம் துபேவும் விளையாடினர். கடைசி ஓவரை கொல்கத்தா வீரர் வைபவ் அரோரா வீசினார்.
முதல் பந்தில் 2 ரன்களும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் சேர்க்கப்பட்டன. இதையடுத்து 3-வது பந்தை சிக்ஸருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்ஸருக்கும் விளாசினார் ஷுபம் துபே. கடைசி பந்தில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தை வைபவ் அரோரா யார்க்கராக வீசினார்.
இதையடுத்து பந்தை ஷுபம் துபே தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்த பின்னர் 2-வது ரன்னுக்காக இருவரும் விரைந்தனர். அப்போது நான்-ஸ்டிரைக்கர் முனையில் பந்தை ரிங்கு சிங் வீசியெறிய அதை சரியாக பிடித்து ரன்-அவுட்டாக்கினார் வைபவ் அரோரா. ஷுபம் துபே 25, ஜோப்ரா ஆர்ச்சர் 12 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி, 5-ல் தோல்வி, ஒரு ஆட்டம் முடிவு இல்லை என்ற நிலையில் 11 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி, 9-ல் தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
குறைந்த ரன்களில் வெற்றி: இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணி 2 போட்டிகளில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2024-ல் ஆர்சிபி அணிக்கெதிராக கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஈடன் கார்டனில் 1,000 ரன்கள்: ஐபிஎல் போட்டிகளில் ஈடன் கார்டன் மைதானத்தில் 1,000 ரன்கள் சேர்த்த 3-வது வீரர் என்ற பெருமையை ஆந்த்ரே ரஸ்ஸல் பெற்றுள்ளார். அவர் இதுவரை 1005 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு இந்தப் பெருமையை கவுதம் கம்பீர் (1,407 ரன்கள்), ராபின் உத்தப்பா(1,159 ரன்கள்) பெற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் விளாசி பராக் சாதனை: இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 95 ரன்களை விளாசி னார். ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இதில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை ரியான் பராக் பறக்கவிட்டார். தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்தார். இதன் மூலமாக ரியான் பராக் தொடர்ச்சியாக 6 சிக்ஸர் களை அடித்து சாதனை புரிந்துள்ளார்