மொத்த அணியும் ஓட்டை என்றால் எப்படி அடைப்பது? – மனம் திறக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி | majority of players not playing well CSK captain Dhoni opens up ipl 2025
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் விளாசினர். ஹைதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ஹர்ஷால் படேல் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் முகமது ஷமி, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை ஹைதராபாத் அணி வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்தது.
ஹைதராபாத் அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 22 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் விளாசினர். சிஎஸ்கேவுக்கு இது 7-வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது. இந்த தோல்வியால் சிஎஸ்கே அணி ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது: நாங்கள் விக்கெட்களை இழந்துகொண்டே இருந்தோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆடுகளம் சற்று சிறப்பாக இருந்தது. ஆனால் 155 ரன்கள் என்பது நியாயம் சேர்க்கக்கூடியதல்ல. 8 முதல் 10 ஓவர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் இருவிதமாக செயல்படத் தொடங்கியது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஏதும் இல்லை.
நாங்கள் இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம். 2-வது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் சிறிது உதவியது. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான பகுதிகளில் வீசினார்கள். இதனால் பந்துகள் சற்று நின்று வந்தன. ஆனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்தோம்.
டெவால்ட் பிரெவிஸ் நன்றாக பேட்டிங் செய்தார். எங்களுக்கு மிடில் ஆர்டரில் இதுபோன்ற பேட்டிங்கே தேவை. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீச வரும்போது நாங்கள் சற்று சிரமப்பட்டோம். திறன் மற்றும் டெக்னிக் மூலம் அதை செய்ய வேண்டும், உங்கள் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது உங்கள் பகுதியில் பெரிய ஷாட்டை விளையாட முயற்சிக்க வேண்டும்.
மிடில் ஆர்டரில் நல்ல வேகத்தில் வீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிக்கவோ, ஆதிக்கம் செலுத்தவோ எங்களால் முடியவில்லை, அந்த இடங்களில் தேக்க நிலையை சந்தித்தோம். இது போன்ற ஒரு தொடரில் துளைகளை அடைக்கக் கூடிய ஒன்று அல்லது இரண்டு பகுதிகள் இருந்தால் அது நல்லது, ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அது மிகவும் கடினம்.
அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளும் போது திட்டம் வேலை செய்யவில்லை என்றால் அடுத்த ஒன்றுக்குச் செல்ல வேண்டும். 4 பேர் ஒரே நேரத்தில் செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என்றால் மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால் நீங்கள் தொடர்ந்து முன்னேறி செல்ல முடியாது.
நாங்கள் போதுமான ரன்களை சேர்க்கவில்லை. இதனால் மாற்றம் அவசியமாகிறது. டி 20 ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது. எப்போதும் 180 முதல் 200 ரன்களை எடுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் ஆட்டத்தின் நிலைமைகளை மதிப்பிட்டு, ரன்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தோனி கூறினார்.
19 முறை மாற்றங்கள்: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் வழக்கமாக விளையாடும் லெவனில் பெரிய அளவில் மாற்றங்களை செய்தது கிடையாது. ஆனால் நடப்பு சீசனில் அந்த அணி 9 ஆட்டங்களில் 19 மாற்றங்களை மேற்கொண்டது. எனினும் இதுவரை வெற்றிக்கான அணிச்சேர்க்கையை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
வெளிநாட்டு வீரர்களில் டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சேம் கரண், ஜேமி ஓவர்டன், நேதன் எல்லிஸ், மதீஷா பதிரனா ஆகியோரும் இந்திய வீரர்களில் ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஸ்வின், முகேஷ் சவுத்ரி ஆகியோரும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒட்டுமொத்த அணியில் ஆந்த்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, ராமகிருஷ்ண கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், கமலேஷ் நாகர்கோட்டி ஆகிய 5 பேருக்கு மட்டுமே இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சூப்பர்மேன் கமிந்து மெண்டிஸ்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ், ஹர்ஷால் படேல் வீசிய பந்தை லாங் ஆஃப் திசையில் விளாசிய போது எல்லைக்கோட்டுக்கு அருகே கமிந்து மெண்டிஸ் பாய்ந்து இரு கைகளால் அற்புதமாக கேட்ச் செய்தார். இந்த கேட்ச்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஏனெனில் டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் விளாசி அச்சுறுத்தலாக திகழ்ந்தார். முதல் 17 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த அவர், இதன் பின்னர் கமிந்து மெண்டிஸ் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டியிருந்தார்.
தொடர்ந்து ஹர்ஷால் படேல் வீசிய அடுத்த ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கு விளாசிய பிரேவிஸ் அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்றபோதுதான் கமிந்து மெண்டிஸின் வியத்தகு கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இதன் பின்னரே சிஸ்கே அணி சரிவை சந்தித்திருந்தது. பீல்டிங்கில் அசத்திய கமிந்து மெண்டிஸ் பேட்டிங்கிலும் நிதானமாக விளையாடி 32 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான பங்களிப்பை வழங்கினார்.