பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி தொடருமா? – லக்னோவுடன் இன்று மோதல் | IPL 2025 | Will Punjab Kings continue their winning streak Today to play with lsg IPL 2025
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள அடல்பிகாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. லக்னோ அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்ற நிலையில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வி கண்ட லக்னோ, 2-வது ஆட்டத்தில் வலுவான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியைத் தோற்கடித்தது.
லக்னோ அணியின் பேட்டிங் எய்டன் மார்கிரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி என மிகவும் வலுவாகக் காணப்படுகிறது. டெல்லி அணியுடனான போட்டியில் மிட்செல் மார்ஷும், நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடினர். மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்களும், பூரன் 30 பந்துகளில் 75 ரன்களும் குவித்து மிரட்டினர். இறுதிக் கட்டத்தில் டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். அதேபோல் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் அரை சதம் விளாசினார். நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து லக்னோ வெற்றி பெற உதவினார்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் ரிஷப் பந்த், ஆயுஷ் பதோனி, எய்டன் மார்கிரம், டேவிட் மில்லர், அப்துல் சமத் ஆகியோரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகும்.
மேலும், பந்துவீச்சில் ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ராத்தி, அவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின்போது, லக்னோவின் பந்துவீச்சுக் குழு அபாரமாக பந்துவீசி மிரட்டக் காத்திருக்கிறது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரேயொரு ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. குஜராத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்களைக் குவித்து மிரட்டியது. பிரியன்ஷ் ஆர்யா 47, ஸ்ரேயஸ் ஐயர் 97, சஷாங் சிங் 44 ரன்கள் குவித்து எதிரணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
எனவே, லக்னோ அணியுடனான போட்டியின்போது பிரியன்ஷ் ஆர்யா, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், அஸ்மத்துல்லா ஒமர்ஸாய், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சஷாங் சிங் ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பவுலிங்கிலும் அந்த அணி வலுவான பந்துவீச்சுப் படையைக் கொண்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஸாய், மார்கோ யான்சன், கிளென் மேக்ஸ்வெல், யுவேந்திர சாஹல் ஆகியோர் எதிரணி வீரர்களின் ரன்குவிப்பை ஒடுக்கக் காத்திருக்கின்றனர். குஜராத் அணியுடனான போட்டியின்போது விஜயகுமார் வைஷாக், கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி, பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்தார்.
எனவே, லக்னோ அணிக்கெதிரான போட்டியில் அவரிடமிருந்தும் சிறப்பான பந்துவீச்சுத் திறன் வெளிப்படலாம்.