முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்? – கொல்கத்தா அணியுடன் இன்று மோதல் | Will Mumbai Indians get their first win in ipl 2025 was explained
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. மும்பை அணி, இந்த சீசனில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி கண்ட நிலையில் களமிறங்குகிறது. சொந்த மைதானத்தில் விளையாட இருப்பதால் முதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குகிறது. சென்னையில் சிஎஸ்கே, அகமதாபாத்தில் குஜராத் அணியுடன் நடைபெற்ற ஆட்டங்களில் மும்பை அணி தோல்வி கண்டது. இந்த 2 போட்டிகளிலும் மும்பை அணியின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை.
சென்னையில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா டக்-அவுட்டானார். மேலும் குஜராத்துடனான ஆட்டத்தில் 2 பவுண்டரிகளை விளாசிய பின்னர் 8 ரன்களிலேயே ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதேபோல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கெல்டனிடமிருந்து எதிர்பார்த்த சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.
திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாட முயன்றாலும் அவர்களிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் இதுவரை வெளிப்படவில்லை.
கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அந்த அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பலாம்.
மும்பையின் பேட்டிங் மோசமாகவுள்ள நிலையில் பவுலிங்கிலும் அந்த அணி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கொல்கத்தா அணியை மிரளச் செய்ய வேண்டுமானால் டிரெண்ட் போல்ட், சாஹர், மிட்செல் சான்ட்னர், சத்யநாராயண ராஜு ஆகியோர் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்யவேண்டிய நிலையில் உள்ளனர்.
அதேநேரத்தில், கொல்கத்தா அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என்ற நிலையில் இன்று 3-வது ஆட்டத்தில் விளையாட உள்ளது. ஆர்சிபி அணிக்கெதிராக தோல்வி பெற்ற அந்த அணி, ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டது.
கொல்கத்தா அணியின் குயிண்டன் டி காக், அஜிங்க்ய ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோர் பிரகாசிக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி எளிதாகும்.
பவுலிங்கில் வைபவ் அரோரா, ஸ்பென்ஸர் ஜான்சன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன், மொயீன் அலி ஆகியோர் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.