ராஜஸ்தானுடன் குவாஹாட்டியில் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் சிஎஸ்கே? | Clash with Rajasthan in Guwahati today does CSK bounce back from defeat
குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் குவாஹாட்டியில் இன்று இரவு 7.30க்கு நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, 2008-ம் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் வீழ்ந்திருந்தது.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் மோசமாக செயல்பட்டது. எதை பலமாக (சுழற்பந்து வீச்சு) அந்த அணி கருதியதோ, அந்த ஆயுதத்தை ஆர்சிபி ஒன்றும் இல்லாமல் சிதைத்துவிட்டது. ஒரே நாளில் இந்த தோல்வியில் இருந்து அதிலும் குவாஹாட்டிக்கு பயணம் செய்து அங்கு சிஎஸ்கே அணி எப்படி மீண்டு வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால் போட்டி நடைபெறும் பார்சபரா ஸ்டிடேடியத்தில் ரன்கள் குவிப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சும் பலவீனமாக காணப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பொறுப்பு கேப்டனாக உள்ள ரியான் பராக், கேப்டன்ஷியில் தடுமாறுவதையும் சிஎஸ்கே பயன்படுத்திக் கொள்ளக்கூடும். கடந்த 26-ம் தேதி இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மொயின் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதனால் நூர் அகமது, அஸ்வின், ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய சிஎஸ்கேவின் சுழற்பந்து வீச்சு குழு, ஆடுகளத்துக்கு தகுந்தவாறு தங்களது வியூகங்களை மாற்றி செயல்படுத்தினால் வெற்றிக்கு வழிவகுக்கலாம். பதிரனா, கலீல் அகமது ஆகியோர் கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
ராஜஸ்தான் அணி அடுத்தடுத்த இரு தோல்விகளில் இருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்தக்கூடும். சஞ்சு சாம்சன் விரல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர், இந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் மட்டுமே விளையாடக்கூடும். பேட்டிங்கில் ரியான் பராக், சாம்சன், ஷுபம் துபே, நித்திஷ் ராணா, துருவ் ஜூரெல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.