சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களின் கோஷம்: மவுனம் காத்த சிஎஸ்கே ரசிகர்கள் | RCB chant at Chepauk stadium CSK fans remain silent ipl 2025
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது வழக்கமாக சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் கோஷம் விண்ணை அதிரவைக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி ரசிகர்களின் வெற்றி கோஷம் விண்ணை முட்டியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.
வழக்கமாக சிஎஸ்கே வீரர்களின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் திறனைப் பார்த்து ரசிகர்கள் அதிக அளவில் கோஷம் எழுப்புவார்கள். இது சிஎஸ்கே வீரர்களுக்கு பெரும் உற்சாகமாக அமையும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் செயல்பாடு மந்தமாக இருந்தது. ரன் குவிக்க முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் திணறினர். இதனால் சிஎஸ்கே ரசிகர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்தது.
ஆனால் அதற்கு நேர்மாறாக மைதானத்தில் குவிந்திருந்த ஆர்சிபி ரசிகர்கள் ‘ஆர்சிபி… ஆர்சிபி…’ என்று உற்சாகக் குரல் எழுப்பி மைதானத்தை அதிர வைத்தனர். ஆர்சிபி ரசிகர்களின் உற்சாக கோஷத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் மவுனம் காக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆர்சிபி ரசிகர்களின் உற்சாக கோஷம், மைதானத்தில் அவர்கள் ஆடிய நடனம் ஆகியவை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.