EBM News Tamil
Leading News Portal in Tamil

மும்பை இந்தியன்ஸை குஜராத் டைட்டன்ஸ் வென்றது எப்படி? – GT vs MI | gujarat titans beats mumbai indians by 36 runs ipl 2025


அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 36 ரன்களில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 197 ரன்கள் இலக்கை மும்பை விரட்டி இருந்தது. ஆட்டத்தில் சவால் இருந்த நிலையில் குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.

குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில், 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பட்லர் உடன் சேர்ந்து 51 ரன்கள் கூட்டணி அமைத்தார் சாய் சுதர்சன். 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து பட்லர் ஆட்டமிழந்தார். ஷாருக், 9 ரன்களில் வெளியேறினார்.

41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த சாய், போல்ட் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். தொடர்ந்து ராகுல் தெவாட்டியா, ஷெப்பர்ட், ரஷீத் கான், சாய் கிஷோர் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். மும்பை கேப்டன் பாண்டியா, 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 20 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது.

ரோஹித் மற்றும் ரிக்கல்டன் இணைந்து மும்பை அணி இன்னிங்ஸை தொடங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார் ரோஹித். அதற்கடுத்த பந்தில் ரோஹித்தை போல் ஆக்கினார் சிராஜ். மீண்டும் 5-ஓவரில் ரிக்கல்டன் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். திலக், 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக வந்த ராபின் மின்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாண்டியா, 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓவருக்கு ஓவர் ரன் ரேட் கூடியது மும்பை பேட்ஸ்மேன்களின் சொதப்பலுக்கு காரணமானது.

20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் 36 ரன்களில் வென்றது. குறிப்பாக குஜராத் அணிக்காக 4 ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா, 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 12-வது ஓவரில் தான் அவர் தனது முதல் ஓவரை வீசினார். அவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார். நடப்பு சீசனில் இது குஜராத் அணியின் முதல் வெற்றியாக அமைந்துள்ளது. மும்பை அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவி உள்ளது.