புதுடெல்லி: ஐபிஎல் போட்டிகளுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்போதும் தனிப்பட்ட வரவேற்பு உள்ளது. இதனை பிரதிபலிக்கும் வகையில், அதன் விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் டிவி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வாயிலாக ரூ.6,000 கோடி வருவாயை ஈட்டும் என்று இத்துறையைச் சேர்ந்த வல்லுர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மூலமாக ரூ.3,900 கோடி வருவாயைப் பெற்ற நிலையில், நடப்பாண்டில் ஐபிஎல் தொடருக்கு முன்பைவிட அதிக வரவேற்பு காணப்படுவதால் விளம்பர வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்பது மதிப்பீடாக உள்ளது.
குறிப்பாக, டிஜிட்டல் ஊடகத்திடமிருந்து 55 சதவீத வருவாயும், டிவி மூலமாக 45 சதவீத வருவாயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி-20 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி மே 25-ம் தேதி நடைபெற உள்ளது.