EBM News Tamil
Leading News Portal in Tamil

பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடு குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

ஏழை, எளியோருக்கு திமுக சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை உள்நோக்கத்துடன் தடுத்துள்ள அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தனது மனுவில் தெரிவித்திருந்தது. இதேபோன்று மதிமுக, காங்கிரஸ் தரப்பிலும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தன்னார்வலர்கள் விநியோகிக்கும் உணவுகளை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், சமூக விலகலை கடைபிடித்தும், மக்கள் கூட்டம் சேராதவாறும் உதவிகள் வழங்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தெரிவித்தது.