EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கால் அடுத்த வேளை உணவுக்கே சிக்கல்… பார்வையற்றோர்கள் வேதனை

சென்னை பல்லாவரத்தில் பார்வையற்றோர்களான 18 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள சர்ச்சிற்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வரும் இவர்கள் தற்போது ஊரடங்கால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள 24 பேர் அடங்கிய இசைக்குழு சர்ச் மட்டுமின்றி பொது இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருமானம் ஈட்டி வந்தனர்.

மேலும் சிறிய கலைப் பொருட்கள் செய்து அவற்றை ரயிலில் விற்றும் வருவாய் ஈட்டினர். அந்த வருமானத்தில்தான் இவர்களின் குடும்பங்கள் நடந்து வந்தன. ஆனால் தற்போதைய ஊரடங்கால் வெளியில் செல்ல முடியாத நிலையில், அடுத்த வேளைக்கான உணவுப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தன்னார்வலர்களின் உதவியால் தாங்கள் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்து இந்த மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர்.