EBM News Tamil
Leading News Portal in Tamil

மனைவியின் கொடுமையில் இருந்த ஆண்களைக் காக்க தனி ஆணையம்: பாஜக எம்.பி. மக்களவையில் வலியுறுத்தல்

மனைவியின் கொடுமையில் இருந்து ஆண்களைக் காப்பதற்காக தனியாக ஆணையம் உருவாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ஹரிநாராயன் ராஜ்பர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக எம்.பி. விடுத்த இந்தக் கோரிக்கையால், மக்களவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. ஆனால் மற்ற எம்.பி.க்கள் சிரித்தபோதிலும், பாஜக எம்.பி ஹரிநாராயண் தனது கோரிக்கையில் வலுவாக இருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், கோஷி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த எம்.பி. ஹரிநாராயன் ராஜ்பர். மக்களவையில் நேற்று கேள்விநேரத்துக்கு பின் எம்.பி. ஹரிநாராயன் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பெண்கள் கொடுக்கும் பொய்யான புகாரில், சிக்கி ஏராளமான ஆண்கள் மனரீதியாக பாதிக்கப்டுகிறார்கள். பொய்யான வழக்குகளில் சிக்கி ஆண்கள் பலர் சிறையில் இருக்கிறார்கள். மனைவிகளின் கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஆதலால் ஆண்களைக் காக்க தனியாக ஆணையம் வேண்டும்.
அந்த ஆணையத்துக்குக் கணவர்கள் ஆணையம் என்று பெயரிட வேண்டும். தற்போது மகளிர் ஆணையம் செயல்படுவது போன்று, இந்த ஆணையம் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பாஜக எம்.பி. நாராயண் பேச்சைக் கேட்டதும், அவையில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். அவையில் 5 பெண் உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களும் லேசாகப் புன்னகை செய்தனர்.