அவதூறு வழக்கு: கோர்ட்டில் ராகுல் ஆஜர்
பிவாண்டி: ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மஹாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி கோர்ட்டில் காங்., தலைவர் ராகுல் நேரில் ஆஜரானார். அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மார்ச் 6-ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது காங். தலைவர் ராகுல், மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பிருப்பதாக பேசினார்.
இது தொடர்பாக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜேஷ் குண்டே என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.கடந்த மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ராகுல் ஜூன் 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதனையடுத்து ராகுல் பிவாண்டி கோர்ட்டில் ராகுல் ஆஜரானார். அப்போது அவர், தாம் குற்றமற்றவன் என கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். தொடர்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், கோர்ட் வளாகத்தில் ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், அவர்கள் என் மீது எந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் கூறட்டும். அதனை நான் தடுக்க மாட்டேன் என்றார்.