EBM News Tamil
Leading News Portal in Tamil

பா.ஜ., – ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன: ராகுல்

புதுடில்லி : டில்லியில் ஓபிசி பிரிவினரிடையே காங்., தலைவர் ராகுல் இன்று உரையாற்றினார். அப்போது பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.
கூட்டத்தில் ராகுல் பேசியதாவது : மக்களை பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் வற்புறுத்துகிறது. ஓபிசி பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. ஆர்எஸ்எஸ் அல்லது பிரதமர் மோடிக்கு எதிராக பேசுபவர்கள் பற்றி சில பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் பேசுவதை கேட்கவே பயமாக இருக்கிறது.
பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ்.,-ல் இருக்கும் 2 – 3 தலைவர்கள் நாட்டை இன்று அடிமையாக்கி வைத்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பேசுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே பேசும் எங்களைப் போன்றவர்களின் பேச்சுக்களை பா.ஜ., காது கொடுத்து கேட்பதில்லை. ஆர்எஸ்எஸ் பேச்சை மட்டும் கேட்கிறது.
உண்மையாக, கடினமாக உழைப்பவர்கள், திறமையுடையவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். திறமை இல்லாதவர்கள் பரிசு கொடுத்து கவுரவிக்கப்படுகிறார்கள். தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி ஆதரவாக உள்ளார். விவசாயிகளின் துயர் துடைக்க எதுவும் செய்யவில்லை. விவசாயிகள் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் தொழில்துறை நிறுவனங்களின் கடன்பாக்கி ரூ.2.5 லட்சம் கோடியாக உள்ளது.
அமெரிக்காவில் சாதாரண மனிதர் கோக்கோகோலா நிறுவன அதிபராகவும், மெக்டெனால்ட் நிறுவன அதிபராகவும், மெக்கானிக், போர்டு மோட்டார் நிறுவனராகவும் முடியும். இந்தியாவில் அது முடியுமா? திறமையானவர்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறுவது பொய் என்றார்.