EBM News Tamil
Leading News Portal in Tamil

மைசூரு ‘முடா’ அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | Enforcement Directorate conducts raids in MUDA office in Mysuru


பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கு தொடர்பாக, மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணைய (முடா) அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “மைசூருவில் உள்ள முடா அலுவலகம் மற்றும் இன்னும் சில இடங்களில் மத்திய துணை ராணுவ பிரிவான சிஆர்பிஎஃப் வீரர்களின் உதவியுடன் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இருப்பினும் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ள எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

மைசூரு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆவணங்களை ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் தேவையான ஆவணங்களைக் கைப்பற்றலாம்” என்று தெரிவித்தனர்.

லோக் ஆயுக்தாவின் சமீபத்தில் வழக்கு (எஃப்ஐஆர்) தொடர்பாக அமலாக்கத் துறை தனது அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கையை (இசிஐஆர்) சில வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்ததது.

முடா மூலமாக தனது மனைவிக்கு 14 இடங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் லோக் ஆயுக்தா என இரண்டு வழக்குகளை சித்தராமையா சந்தித்து வருகிறார்.

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதியின் கோரிக்கைபடி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன‌. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றும், முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து முதல்வரின் மனைவி பார்வதி தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை முடாவிடம் திரும்ப ஒப்படைத்தார்.

தானும் தனது குடும்பத்தினரும் எந்தத் தவறும் செய்வில்லை என்று குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சிகள் தன்னைப் பார்த்து பயந்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் முதல் அரசியல் வழக்கு இதுவே என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையை இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து முடா தலைவர் கே.மாரிகவுடா தனது உடல்நிலையைக் காரணம் காட்டி புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.