EBM News Tamil
Leading News Portal in Tamil

தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து | Cant prevent contesting in elections under the same name


உச்ச நீதிமன்றத்தில் சாபு ஸ்டீபன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலில் ஒரே பெயரில் பலரை வேட்பாளர்களாக நிறுத்தும் நடைமுறை தவறானது. இது, வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான பழைய தந்திரம்.

ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அத்தகைய நடைமுறை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் தேர்தல் விதிகள் 1961-ல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டீபன் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சதீஷ் சந்திர சர்மா, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜுவிடம் நீதிபதிகள் கூறுகையில், “யாராவது ராகுல் காந்தி அல்லது லாலு பிரசாத் யாதவ் பெயரை வைத்திருந்தால் அவர்களை தேர்தலில் போட்டியிடுவதை எவ்வாறு தடுக்க முடியும்.

இது அவர்களின் உரிமைகளை பாதிக்காதா? ஒருவரின் பெற்றோர் தனது குழந்தைக்கு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினால், அது அவர்களின் தேர்தல் போட்டி போடும் உரிமைக்கு தடையாக இருக்குமா?’’ என்ற கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து, “இந்த வழக்கின் கதி என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கறிஞரிடம் மனுவை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தினர்.