EBM News Tamil
Leading News Portal in Tamil

Good vs Bad: இதைத் தாண்டி சிந்திப்பது உண்டா? – வாழ்வின் சுவாரஸ்யம் சொல்லும் உளவியல் பார்வை | Good vs Bad snap judgments and psycological impact on human beings explained


நல்லது / கெட்டது… நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களையும், நமது செயல்களையும், நாம் எதிர்கொள்ளும் பிறரின் செயல்களையும், பொருட்களையும், மனிதர்களையும், கலைகளையும் இன்னும் இத்யாதி, இத்யாதி விஷயங்களையும் நல்லது / கெட்டது என்றுதான் வரையறை செய்கிறோம். ஆனால் அப்படியான சட்டகத்துக்குள் உணர்வுகளை, பார்வைகளை, உறவுகளை அடைக்காவிட்டால் அதையும் தாண்டி ஒரு சுவாரஸ்யமான உலகை நம்மால் காண முடியும் என்கிறார் அயல்நாட்டு தத்துவ மேதை ஒருவர்.

உதாரணத்துக்கு, சமூக ஊடகங்களில் உலா வரும் போக்கை சுட்டிக் காட்டுகிறார். சமூக வலைதளங்களில் கனமழை எச்சரிக்கை பற்றிய பதிவுகளை நாம் மோசமான தகவல் என்றும், செல்லப் பிராணிகளின் சேட்டைகள் பற்றிய வீடியோக்களை நல்லது என்றும் வரையறுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய முன் மதிப்பீடுகளால் நாம் இந்த உலகின் மிக நுட்பமான, சுவாரஸ்யமான விஷயங்களை எல்லாம் நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம் என்று கூறுகிறார் அவர். ஜட்ஜ்மென்ட் எனப்படும் முன்மதிப்பீடு கண்ணாடி மூலம் இதெல்லாம் நல்லது, இவையெல்லாம் கெட்டவை என்ற பார்வையை கைவிடுவோம் என்பதே இக்கட்டுரையின் சாராம்சம்.

எண்ணம் தான் எல்லாமே! – ஒருவரின் மனநிலைதான் அவர் இந்த உலகை எப்படி அனுபவிக்கிறார் என்ற கண்ணோட்டதைத் தீர்மானிக்கிறது.எதை எடுத்தாலும் அதை சீர்தூக்கிப் பார்க்கும் மனோபாவம், வாழ்க்கையின் நேர்மறையான பரிமாணங்களை அனுபவிக்கவிடாமல் தடுத்துவிடும். நல்லது, கெட்டது என்ற தீர்மானங்களை நோக்கியே நீங்கள் நகரும்போது உங்கள் மனம் புதிய விஷயங்களை ஆர்வத்துடன் அணுகுவதையும், சுவாரஸ்யமான அனுபவங்களைப் பெறுவதற்கான முயற்சிகளும் குறைத்துக் கொள்ளும். நீங்கள் உங்கள் மனதை ஈடுபடுத்துவதற்கும், ஆர்வத்தைப் பயன்படுத்துவதற்கும், சுவாரஸ்யமான அனுபவங்களைப் பெறுவதற்கும் குறைவாகவே முயற்சிப்பீர்கள்.

மனதைக் குறுக்கும் மதிப்பீடுகள்: எதை எடுத்தாலும் அதற்கொரு மதிப்பீடு கொடுக்கும் நபராக உங்களை மாற்றிக் கொண்டால், அந்த விஷயத்தை நல்லதா அல்லது கெட்டதாக்கும் அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள்.

ஒரு காலைப் பொழுது, வானில் கருமேகங்கள் சூழக் கண்டவுடன், ஐயோ இன்றைய வேலைகள் எல்லாம் கெட்டன என்று நீங்கள் முடிவு செய்துவிடுவீர்கள். அன்றைக்கு உங்களுக்கு கருமேகம் கெட்டதாகிவிடுகிறது. ஆனால், முந்தைய நாள் வரை வாட்டி வதைத்த வெயில் தணிந்து நிலவும் குளிர்ச்சி, சில்லென தொட்டுச் செல்லும் தென்றல், மரம், செடிகளில் தவழும் தென்றல் மரக்கிளைகளில் இருந்து உதிர்த்துவிடும் மலர்கள், கருமேகத்தை அன்றுதான் முதன்முதலில் முழுதாய்ப் பார்த்து வியக்கும் குழந்தையின் முகம் என அந்த இடத்தில் இருக்கும் மற்ற அத்தனை சுவாரஸ்யங்களும் கண்ணில் இருந்து மறைந்துபோகும்.

இப்படித்தான் முன்மதிப்பீடுகள் உங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் போது சிறு சிறு மகிழ்ச்சிகளில் இருந்து நீங்கள் விலகியே நிற்பீர்கள். ஒருவேளை உங்கள் முன்மதிப்பீட்டுப் பார்வையில் எல்லாமே நல்லது / கெட்டது என்ற வகைப்பாட்டில் மட்டுமே இருக்குமென்றால் ஆச்சரியமூட்டுவது, அபூர்வமானது, மர்மமானது, நுட்பமானது என்று நீங்கள் எதையாவது பார்த்து சிலாகிக்க வாய்ப்பிருக்குமா?. இது புதிதாக இருக்கிறதே! இது சவாலனதாக இருக்கிறதே! அட, இது எதையோ தூண்டுகிறதே! என்று எந்த ஆச்சர்யக்குறிகளும் உங்கள் மூளையில் பிரவேசிக்காமல் போகும். உண்மையில் கேள்விகளும், ஆச்சர்யக்குறிகளும் தான் அறிவாற்றல் திறனை வளர்க்கக் கூடியவை. ஆனால், நீங்கள் முன்மதிப்பீடு என்று கடினமான தோல் மூலம் உங்கள் எண்ணங்களையும் வடிகட்டி சுருக்கிக் கொண்டால், அறிவாற்றால் வளர்வது எப்போது?!

மனதை திறந்து வையுங்கள்… – உளவியல் ரீதியாக செழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் எப்போதும் திறந்த மனதுடன் இருங்கள். முன்மதிப்பீட்டு பார்வை உங்கள் வாழ்க்கை அனுபவங்களின் பிற அம்சங்களை நீங்கள் உணராமல் செய்துவிடும். ஆனால், இந்தப் பழக்கம் மாற்றிக் கொள்ளக் கூடியதே. நீங்கள் எந்தவொரு விஷயத்தையும் நல்லது, கெட்டது என்று மட்டுமே பார்க்காமல் இருக்க உங்கள் மனதை பழக்கப்படுத்தலாம். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நீங்கள் இன்னும் இன்னும் அதிகமாக கவனிக்கும் போது, உங்கள் மனம் ஆர்வமாகும், புதிதாக எதையாவது தேடிச் செல்லும்.

கட்டக் கடைசி தீர்ப்புகள்: நல்லது /கெட்டது என்ற தீர்மானங்கள் உண்மையில் ஒரு விஷயத்தின் மீதான கட்டக் கடைசி தீர்ப்புகள் எனலாம். எனவே, எதிலும் அந்த முன்மதிப்பீடு இருந்தால் மனிதர்களுக்கே உரித்தான சவால்களை சமாளிக்கும் பன்பு குறைந்துவிடும். ஒரு தட்டையான நபராகத் தான் நீங்கள் இருப்பீர்கள். ஒரு நல்ல உணவை சாப்பிட்டுவிட்டு ‘ருசியாக இருந்தது’ என்பதோடு நிறுத்தாமல் அதை மாதிரியே சமைத்துப் பார்க்கவோ, அல்ல அதிலிருக்கும் புதுமைகளை உங்களின் சமையலில் புகுத்திப் பார்க்கவோ உங்கள் மனம் தூண்டப்பட்டிருந்தால், அதைப் பற்றி நான்கு பேரிடம் ரசித்துப் பேச முடிந்தால் நீங்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை அனுபவிக்கத் தெரிந்தவர்.

உங்கள் அலுவலகத்தில் ஒரு நபரை, இவர் எரிச்சலூட்டக் கூடியவர் என்ற முத்திரையை விலக்கிவிட்டு, மனிதர்கள் இத்தகைய குறைகளால் நிறைந்தவர்கள் என்று திறந்த மனதுடன் அணுகினால், உங்களுக்குள் இரக்கம் பிறக்கும். ஒரு விஷயத்தை நல்லது என்று தீர்மானித்தால் அதன் மீது விருப்பமும், கெட்டது என்று தீர்மானித்தால் அதன் மீது வெறுப்பும் மட்டுமே வரும். ஆனால் அதையும் தாண்டிய அனுபவங்களுக்கு திறந்த மனம் வேண்டும்.

வலிகள், போராட்டங்கள், அதற்கான விலைகள், வெகுமதிகள் என பல்தரப்பட்ட உணர்வுகளுக்கு திறந்த மனம் வேண்டும். வாழ்க்கை போர் அடிக்காமல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமென்றால் முன் தீர்மானங்கள் கூடாது. திறந்த மனம் காலப்போக்கில் எல்லா விஷயங்களுக்கும் இடையே ஒரு தொடர்புப் புள்ளி இருப்பதை கண்டடையும், படைப்பாற்றலுக்கு வித்திடும், சிக்கலான இடங்களில் உங்களின் அறிவாற்றலை செயல்படுத்துவதிலும் மனம் செல்லும். அவ்வாறு மனதை செலுத்தும்போது, உங்கள் உலகம் இன்னும் பரிபூரணமானதாக இருக்கும். தேடல் உள்ள ஓர் உயிராக நீங்கள் இருப்பீர்கள். செல்வம் என்பது உளவியல் ரீதியாகவும் செழுமையாக இருப்பதையும் உள்ளடக்கியதுதான்.

எப்படி சாத்தியப்படுத்துவது? – இதை எப்படி சாத்தியப்படுவத்துவது என்ற கேள்வி எழாமல் இருக்காது. புதிய விஷயங்களில் உங்களை ஈடுபடுத்துங்கள். அப்போது உங்களின் எல்லைகள் விரிவடைவதோடு, அதன் மீதான் உங்களின் பார்வையும் விரிவடையும்.ஒரு புதிய விஷயத்தை நீங்கள் முன்னெடுத்துச் செய்யும்போது, இனி எது வந்தாலும் அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். நான் என்ற உணர்வே உங்களுக்கு நம்பிக்கையான உணர்வாக மாறும். நல்லது, கெட்டதை புறந்தள்ளிவிட்டு: வாழ்க்கையில் நல்லது, கெட்டது என்பதை புறந்தள்ளிவிட்டு சுவாரஸ்யமானதை நோக்கிச் செல்லுங்கள். இன்றே, இப்பொழுதே.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்