EBM News Tamil
Leading News Portal in Tamil

வாணியம்பாடி அருகே 15ம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு | 15th Century Stone Plot Discovered near Vaniyambadi


வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி மேற்கு பகுதியில் 8 கி.மீ தொலைவில் ஆந்திர எல்லையை சுற்றியுள்ள இடத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன், சந்திரசேகரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, திகுவாபாளையம் என்னும் சிற்றூரின் எல்லையில் 2 சதிகல்லை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு கூறும்போது, “வாணியம்பாடி வட்டம் திகுவாபாளையத்தைச் சேர்ந்த கோவேந்தன் என்பவர் அளித்த தகவலின் பேரில் நாங்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது திகுவாபாளையம் குறவர் வட்டம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 3 ½ அடி உயரமும், 2 ½ அடி அகலமும் கொண்ட இரண்டு பலகை கற்களில் அமைக்கப்பட்ட சதி கற்கள் இருப்பது கண்டறியப்பட்டன.

புதர் மண்டியிருந்த அப்பகுதியினை நாங்கள் தூய்மை செய்து சதிக்கற்களை தண்ணீர் ஊற்றி கழுவி தூய்மைப்படுத்தி அதிலிருந்தவற்றை ஆய்வு செய்தோம். அதில், ஒரு கல்லில் வீரர் ஒருவர் தனழ வலது கையில் போர் வாளினை ஊன்றிய நிலையில் தனது இடது கையில் கேடயத்தினை ஏந்தியவாறு உள்ளார். அருகிலுள்ள, மற்றொரு சதி கல்லில் வீரரின் வலது கையில் ‘கட்டாரி’ என்ற ஆயுதத்தினை ஏந்தி தனது இடது கையினை உயர்த்தி ஆவேசமாக போரிடுவது போல் காட்டப்பட்டுள்ளது.

இருவரது கழுத்திலும் ஆபரணங்களும், கைகளில் பூணும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார்கள். இடையில் கச்சையும், அதனோடு சிறு கத்தியும் வைத்துள்ளார்கள். ஒரு நடுகல்லில் வீரனின் அருகில் அவரோடு தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அவரது மனைவியின் உருவமும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

அதன் அருகிலுள்ள நடுகல்லில் வீரரின் அருகே இருபுறமும் 2 பெண் உருவங்கள் காணப்படுகின்றன. அவர்கள் அவ்வீரரின் இரண்டு மனைவியராவர். 2 நடுகற்களிலும் செதுக்கப்பட்ட பெண் உருவங்களின் வலது கரங்களில் ‘கள்’ குடங்களை ஏந்திய நிலையில், இடது கரத்தில் மலர்களை பிடித்தபடி காணப்படுகின்றனர்.

இது அவ்வீரர்கள் போர்க்களத்தில் போரிட்டு உயிரிழந்து சொர்க்கலோகம் சென்றனர் என்பதை அறிவிப்பதாகும். பொதுவாக நடுகற்களில் வீரர்களோடு பெண் உருவங்களும் இடம்பெறும் போது அவற்றை சதிகல் என அழைப்பது வழக்கமாகும். அந்த வகையில் இங்குள்ள 3 கற்களும் போரில் உயிரிழந்த வீரர்களையும், அவர்களோடு தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்ட அவர்களது மனைவியர்களையும் நினைவுகூறும் விதமாக வடிக்கப்பட்டவையாகும்.

இரு சதிகற்களுக்கும் அருகே ஒரு காமாட்சியம்மன் சிலையும் காணப்படுகிறது. அச்சிலையானது 2 அடி உயரமும், 1 ½ அடி அகலமும் கொண்டதாகும். இச்சிலை நடுகல் அமைக்கப்பட்டதன் பிற்காலத்தில் இங்கு வைக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கல்லின் அமைப்பினை பார்க்கும்போது இவை போரில் மடிந்த வீரர்களுக்கும், அவ்வீரர்களோடு உயிர் நீத்த அவர்தனது மனைவியருக்குமான நினைவு கற்களாகும். செதுக்கப்பட்டுள்ள உருவ அமைப்பினை பார்க்கும்போது இக்கல் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சின்னமான இது போன்ற அரிய வரலாற்று தடயங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கிடைத்துவருவது இப்பகுதியின் வரலாற்று பின்புலத்தினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது” என்றார். தொடர்ந்து அந்நடுகல் குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டபோது, “காட்டு மாரியம்மன்” என்ற பெயரில் இதனை வழிபட்டு வருவதாக தெரிவித்தனர்.