EBM News Tamil
Leading News Portal in Tamil

மறக்குமா நெஞ்சம் | அம்பாஸிடர் கார் உற்பத்திக் கூட வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா | Anand Mahindra shares video of Ambassador car production tribute memories


மும்பை: 90-கள் வரையில் பெரும்பாலான இந்தியர்கள் அதிகம் பயணித்த கார் என்றால் அது அம்பாஸிடர் காராக தான் இருக்கும். இந்த சூழலில் அம்பாஸிடர் காரின் உற்பத்திக் கூட வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அம்பாஸிடர் காரின் மறக்க முடியாத பசுமையான நினைவுகளை அவர் ரீவைண்ட் செய்துள்ளார். இந்த வீடியோவில் அந்த காரின் மேக்கிங் இடம்பெற்றுள்ளது. வழக்கம் போலவே அவரது இந்த பதிவும் பரவலான பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

அம்பாஸிடர் கார்: கடந்த 1956 முதல் இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறந்த கொண்டிருந்தது இந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாஸிடர் கார். இந்திய நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கார் என்பதால் இதற்கு தனி மவுசு. அப்போதைய இந்திய சாலைகளில் சுகமாக பயணிக்க இந்த கார் உதவியது.

சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் பயணிக்கின்ற காராக அம்பாஸிடர் இருந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் இந்த காரில்தான் பயணித்தனர். அந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் இது.

கால ஓட்டத்தில் சந்தையில் மற்ற நிறுவனங்களுடனான போட்டி காரணமாக மெல்ல தனது மவுசை இழந்தது அம்பாஸிடர். கடந்த 2014-ல் இதன் உற்பத்தி முழுவதுமாக நின்றது.

இந்தச் சூழலில் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். “பழைய கிளாசிக் கருப்பு வெள்ளை சினிமாவை பார்க்கும் போது ஏற்படும் அதே உணர்வை இந்த வீடியோவை பார்க்கும் போது பெற முடிகிறது. இந்த கார் உற்பத்தி முறை பழங்கால பாணி. ஆனால், இந்துஸ்தான் அம்பாஸிடர் கார் பல தசாப்தங்கள் இந்திய நிலங்களில் பரவலாக காணப்பட்டது.

அது நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது. காரின் சப்தம் போன்றவையெல்லாம் இருந்தாலும் அது அந்தஸ்து, அதிகாரம் போன்றவற்றின் அடையாளமாக இருந்தது. மாறாத இந்த பசுமையான நினைவுகள் தந்தமைக்கு நன்றி நண்பரே” என அந்த பதிவுக்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது பழைய அம்பாஸிடர் காரை அண்மையில் புதுப்பித்து, அதை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.