அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் குப்பையை தரம் பிரித்து, மண்புழு உரம் தயாரிக்க கொட்டகை மற்றும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றில் மக்கும் குப்பையை மண்புழு உரமாக தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அனைத்து கிராமங்களிலும் கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால், இதற்காக அமைக்கப்பட்ட கொட்டகைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.