சமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி: பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் இரங்கல்
கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என, பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் வந்தனர். தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் பிரதமர் மோடியுடன் வந்திருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பின்பு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி மறைவுக்கு தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், “தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்” என மோடி பதிவிட்டுள்ளார்.