தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோயை தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-ம் தேதி (நேற்று) முதல் வரும் 7-ம் தேதி வரை ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை எழும் பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப் பால் வார தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி, சுவரொட்டிகள், ஸ்லோ கனைப் பார்வையிட்டு, வண்ண பலூன்களைப் பறக்கவிட்டு, தாய்ப் பால் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். பின்னர் அமைச்சர் தலைமையில் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். இதை யடுத்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் பேசிய தாவது:
உலக தாய்ப்பால் வாரத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘தாய்ப்பால் ஊட்டுதல் வாழ்க்கை யின் அடித்தளம்’ என்பதாகும். குறைந்தபட்சம் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் எதுவா யினும் தாய்ப்பாலை உடனே புகட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது, தாயின் மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோயினை தடுக்கும். பிறந்த சிசுவுக்கு சீம்பாலே இயற்கையான முதல் தடுப்பு மருந்தாகும்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின் றன. இவற்றில் 99 சதவீத பிரசவங் கள் மருத்துவமனைகளில் நடை பெறுகின்றன. தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தேனி மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகள், எழும் பூர் அரசு தாய்சேய் நல மருத்துவ மனை மற்றும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய 9 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின் றன.
உதகமண்டலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், கோவில்பட்டி, பெரம்பலூர், விருது நகர், ராமநாதபுரம் மற்றும் தென் காசி ஆகிய 15 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.1.5 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தை களின் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. அதன்படி, கடந்த ஜூன் 23-ம் தேதி நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப் பட்டுள்ளது. இதுவரை 14,530 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனர். 12,316 குழந்தை கள் தாய்ப்பாலைத் தானமாக பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவ மனை இயக்குநர் அரசர் சிரா ளன், எத்திராஜ் மகளிர் கல்லூரி தலைவர் வி.எம்.முரளிதரன், முதல்வர் (பொ) எஸ்.புவனேஸ்வரி, பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.