வேகமாக நிரம்பும் தமிழக அணைகள்
சென்னை : தென்மேற்கு பருவமழை தீரவிமடைந்துள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முல்லை பெரியாறு அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 121 அடி ஆகி உள்ளது. தென்பெண்ணை, கிருஷ்ணகிரி அணைகளில் நீர்வரத்து அதிகமானதால் விநாடிக்கு 1600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 3.2 அடியும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு, விநாடிக்கு 7000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டம், வால்பாறையில் நேற்று ஒரே நாளில் சோலையார் அணை நீர்மட்டம் 22 அடி உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து, 6436 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 6 அடி உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.