கொரோனா பாதிப்பு நிதி கேட்டு ரஜினிகாந்த் வீட்டு முன் கூடிய திருநங்கைகள்!
கொரோனா பாதிப்பு நிவாரணம் கேட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பு திருநங்கைகள் ஒன்று கூடி குரல் எழுப்பியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 திருநங்கைகள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தனர். அவர்கள் திடீரென ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு கூடி தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வெகுநேரமாகியும் வீட்டிலிருந்தவர்கள் பதிலளிக்காததால் அங்கிருந்த திருநங்கைகள், ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வராமல் அங்கிருந்து போகமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்கு சுமாா் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது வீட்டின் காவலாளி மூலம் திருநங்கைகளுக்கு ரூ. 5000 பணம் கொடுத்து உதவினார். பணத்தைப் பெற்றுக் கொண்ட திருநங்கைகள் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இத்தகவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.