EBM News Tamil
Leading News Portal in Tamil

மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்: கமல்

மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார்.
கமல் இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த மும்பை, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட ஊர்களுக்குப் பயணித்துள்ளது படக்குழு.
ஹைதராபாத்தில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசியதாவது:
கேரவனில் தங்குவது, மேக்கப் போடுவதெல்லாம் நடிப்பு இல்லை. நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும். இயக்குநர் எதிர்பார்க்கும் நடிப்பைக் கொடுக்க வேண்டும். இந்தியச் சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது. திறமையான கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள்.
‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் உலகத் தரத்தில் இருக்கும். முதல் பாகத்தின் கதை முழுமையாக வெளிநாட்டில் நடைபெற்றது. ஆனால், 2-ம் பாகம் இந்தியாவில் நடக்கும் கதை. சில பிரச்சினைகளால் இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. முதல் பாகத்துக்குப் பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால், இரண்டாம் பாகத்துக்கு இருக்காது என்று நம்புகிறேன்.
தற்போது ஒரு படத்துக்கான ஆயுள் என்பது 3 வாரங்கள்தான். பிறகு அப்படத்தை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை மக்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்குப் பணம், புகழ் எல்லாவற்றையும் மக்கள் கொடுத்தனர். அவர்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு கமல் பேசினார்.